பார்வதி உடனுறை கைலாயநாத ஸ்வாமி திருக்கோயில், கூனஞ்சேரி
அமைவிடம் :
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை – திருவைகாவூர் வழியில் உள்ள ஆதனூர், புள்ளபூதங்குடி என்ற இரு வைணவ ஸ்தலங்களுக்கு அருகில், எல்லா உயிர்களும் இம்மைபேறு பெற்றுய்யும் பொருட்டு பார்வதி அம்பாளுடன் பரமேஸ்வரன். கைலாயநாதர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியுள்ளார். அஷ்டாவக்கிரன் எனும் எண்கோண மகரிஷி சிவபெருமானை வழிபட்டு தனது உடலில் உள்ள ஊனங்களை நீக்கிக் கொண்ட அற்புதமான தலமாகும்.
அஷ்டவக்கிரன் கூனல் நிமிர்ந்தபுரம் வரலாறு:
சோழவள நாட்டில் தண்டகாரண்யம் என்ற வனத்தில் பழவாற்றங்கரையில் குடில் அமைத்து அந்தணச் சிறுவர்களுக்கு தானவ மகரிஷி என்பவர், வேத ஆகமங்களை போதித்து வந்தார். தானவ மகரிஷி புத்திரப்பேரின்மையால் ஈசனை வேண்டி, அவர் அருள் வாக்குப்படி அந்தணச் சிறுவர்களுக்கு வேத ஆகமங்கள் போதித்து வந்தார். அவர் மனைவி கர்பவதியானார். தினசரி கர்பவதியான அவரது மனைவி, பின்னால் இருந்து பாடங்களை கவனித்து வந்தார். ஆகமங்கள் போதித்து வந்தபோது சிறுவன் ஒருவன் தூங்கி எழுந்தான். தூங்கிய சிறுவனை கடிந்து கொண்டார் முனிவர். அருகில் நின்றிருந்த கர்பவதியான அவரது மனைவியின் வயிற்றிலிருந்து குழந்தை “ஏ பிதாவே இரவு பகல் பாராது எப்போதும் போதனை செய்தால் தூக்கம் தானே வரும். இது சகஜம் தானே. இதை நீ அறியமாட்டாயா?” என்றொரு கேள்வி மழலைக் குரலில் கேட்டது. கோபமடைந்த மகிரிஷி தன் வாரிசு என்றும் பாராமல் நீ பிறக்கும் முன்பே கேள்வியா கேட்கிறாய்!! வளைந்த கேள்விக்குறி போலவே நீ அஷ்ட கோணலாய் பிறக்கக் கடவாய்! என்று சாபமிட்டார். சாபம் பலித்தது. அக்குழந்தை 8 வித உடல் வளைவுகளோடு பிறந்தது. சாப நிவர்த்திக்காக ஈசனின் ஆணைப்படி மேற்படி ஸ்தலத்தில் அஷ்டமியன்று அஷ்ட லிங்கங்களை அஷ்டவக்கிரன் வைத்து பூஜித்து வந்தான். ஞானத்தில் சிறந்த அஷ்டவிக்கிரன் மிதிலாபுரியில் ஜனக சக்கரவர்த்தியின் அவையில் தனது தந்தையை தோற்கடித்த தலைமை பண்டிதனான வந்தியை வாதத்தில் வென்று அவனால் தண்டிக்கப்பட்ட தனது தந்தையையும், மேலும் 100 பேரையும் காப்பாற்றினார்.
ஊனம் களையும் தலம் :
தாம் விடுத்த சாபம் தன் மகன் ஊனமாக பிறக்க காரணமாகி விட்டதையும், ஆனாலும் ஞானம் நிரம்பிய தன் மகன் தன்னையே காப்பாற்றியதையும் உணர்ந்த தானவ மகரிஷி தன் மகனின் ஊனம் நீங்க கைலாஸநாதனை வேண்டினார். அவரது வேண்டுதலை கண்டு இறங்கி கைலாசநாதர் அஷ்ட வக்கிரனின் ஊனங்களை நீக்கி அழகு பொருந்தியவனாக மாற்றினார்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழமன்னர் பரம்பரையில் கட்டப்பட்ட சிவாலயம் (குலோத்துங்க சோழ மன்னார்).
அஷ்டதிக்கு பாலகர்கள் ஒவ்வொருவரும் இக்கலியுகத்திலும் தினமும் வந்து பூஜிக்கும் பூவுலகின் ஒரே அஷ்ட பைரவ லிங்கத்தலம் கூனஞ்சேரி.
இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன் வாயு, குபேரர், ஈசான்யர் ஆகிய எட்டு திக்கு பாலகர்கள், இறை ஆணைப்படி தினமும் திருவண்ணாமலையில் பூஜித்த பின்னர் இங்கு வந்து இன்றும் பூஜித்து வருகின்றனர். ஆகையால் இங்குள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுபவர்கள் திருவண்ணாமலைக்கு சென்று தரிசித்த பலன்கள் அனைத்தும் கிடைக்கும். பெளர்ணமியன்று காலை இங்குள்ள அஷ்டலிங்கங்களை கிரிவலம் வந்த பிறகு திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து தரிசனம் செய்தால் அதிக பலன்களை பெறலாம்.
அர்ச்சகர் விலாசம் :
V.நாகராஜக் குருக்கள்
1-170, மேட்டுத்தெரு,
கூனஞ்சேரி,
புள்ளபூதங்குடி (அஞ்சல்) – 612 301
தஞ்சாவூர் மாவட்டம்.
செல் : 98431 38641, 95859 67429