சூளிகாம்பா சமேத கணபதீஸ்வரர் திருக்கோயில் , திருச்செங்காட்டங்குடி
அமைவிடம் :
திருவாரூர், திருமருகல் சாலையில் திருச்செங்காட்டங்குடி என்று பெயர்ப்பலகை காட்டும் சாலையில் திரும்பி கால்நடை மருந்தகம் தாண்டிச் சென்றால் 3 கிமீ க்களில் இத்தலத்தை அடையலாம்.
திருச்செங்காட்டங்குடி வழியாகச் செல்லும் நகரப் பெருந்துகளும் உள்ளன. திருப்புகலூரிலிருந்து திருக்கண்ணபுரம் வந்தால் அங்கிருந்தும் இத்தலத்தை அடையலாம் .
காவிரியின் தென்கரையில் பாடல் பெற்ற 127 தளங்களில் 79 ஆவது தலமாக இத்தலம் விளங்குகின்றது. திருச்செங்காட்டங்குடிக்கு வடக்கில் முடிகொண்டான் ஆறும், தெற்கில் புத்தாறும் ஓடுகின்றன. ஊருக்கு திருச்செங்காட்டங்குடி என்றும், கோயிலுக்கு கணபதீச்சரம் என்றும் பெயர் வழங்கப்படுகிறது.
கிராமத்தின் நடுவில் கோயில் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கிழக்கு நோக்கியது. கோயிலின் எதிரில் சத்திய தீர்த்தம் உள்ளது. குளக்கரையில் மங்கள விநாயகர் இருக்கிறார். ராஜகோபுரத்தின் உட்புறம் அத்திமரம் உள்ளது. மரத்தினடியில் இறைவன் அமர்ந்திருக்க அவரை சிறுத்தொண்டர் அமுது செய்ய அழைக்கும் சிற்பம் உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் அம்பாள் சந்நிதி. நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். அம்பாள் சந்நிதிக்கு மேற்கே அலங்கார மண்டபத்தைக் காணலாம் . அதற்கு வடக்கே சமுத்திரராஜா லிங்கத்தைக் காணலாம்.
கொடிமரம் தாண்டி உட்ப்ரகாரம் சென்றால் பிட்சாடனர், சந்தன நங்கை , சீராள தேவர் , திருவெண்காட்டு நங்கை மற்றும் சிறுத்தொண்டர் ஆகியோரின் மூலத்திருமேனிகளையும் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளையும் தரிசிக்கலாம். தலமரம் அத்தி உள்ளது. வாதாபி கணபதி தனிக்கோயிலாக எழுந்தருளியுள்ளார். சத்பாஷாட மகரிஷி , அவர் பூஜித்த லிங்கம் , ப்ரம்மா வழிபட்ட லிங்கம் , வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.
இத்தலத்தின் சிறப்பாக அஷ்டமூர்த்தி மண்டபம் ஒன்று உள்ளது. துர்கை , வீரட்ட லிங்கம் , விஸ்வலிங்கம் , புஜங்கலளிதர் கஜசம்ஹாரர் , ஊர்த்துவதாண்டவர் , காலசம்ஹாரர் , கணக்காளர் , பிட்சாடனர் , த்ரிபுராரி , பைரவர் , விநாயகர் முதலிய மூலத்திருமேனிகள் மிகவும் அழகிய வேலைப்பாடுடையவை இம்மண்டபத்தில் உள்ளன. இவைதவிர விசேஷமாக ஸ்தம்பமூர்த்த விநாயகர் நடராஜ சபை, சூரியன் மூர்த்தங்கள் உள்ளன.
பிரகார வலம் முடித்து திண்டி முண்டி ஆகிய துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் நேரே தெரிவது மூலவர் கணபதீச்சரமுடையார். ஸ்வாமி கருவறை அகழி அமைப்புடையது. அழகிய மூர்த்தம், கோகேஷ்ட மூர்த்தங்களில் சிறப்பாக அர்த்தநாரீஸ்வரர் ரிஷபத்தின் மீது ஊன்றியவாறு காட்சியளிக்கிறார்.
கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரை பரணியில் உத்திராபதீசர் அமுது செய்த ஐதீக விழா நடைபெறுகிறது. இதன் வடப்புறத்திலுள்ள சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாக உள்ளது. இங்கு ஈசனுக்கு சிறுத்தொண்டருக்கும் உத்திராபதீசருக்கும் திருவெண்காட்டுநங்கை உணவு பரிமாறும் நிலையில் ஒரு திருவுருவம் உள்ளது.
நான்கு வீதிகளின் கோடியில் விநாயகர் ஆலயங்கள் உள்ளன. கோயிலின் கீழ வீதியில் உள்ள விநாயகர், வேண்டும் விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
வடநாட்டு பைரவ வேடத்தில் ஈசன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் , அவர் மனைவி , மகன் , வேலைக்காரி ஆகியோருக்கும் அருள் புரிந்த தலம் .
பல்லவ மன்னனின் தளபதியாக வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த வடநாட்டு விநாயகரை சிறுத்தொண்டர் என்றறியப்பட்ட பரஞ்சோதியார் இத்தலத்தில் தான் பிரதிஷ்டை செய்தார். இப் பெருமைமிகு விநாயகருக்கு வாதாபி கணபதி என்ற பெயர் உண்டு. இதன் தொடர்ச்சியாகவே அனைத்து சிவாலயங்களிலும் தென்மேற்கு கோடியில் விநாயகர் பிரதிஷ்டை செய்யும் வழக்கம் வந்தது என்று கூறுபவர்களும் உண்டு.
கஜமுகாசுரனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக விநாயகர் வழிபட்ட தலமாதலால் இது கணபதீச்சரம் என்று வழங்கப்படுகிறது.
கஜமுகாசுரனைக் கொன்ற போது அவனது குருதி பெருகி இவ்விடம் இரத்த நிறமாய் மாறிவிட்டபடியால் செங்காட்டங்குடி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு புராணம் சிவபெருமான் சத்தியாஷாட முனிவருக்காக ரக்தபீஜன் , ரக்தனாமுகி என்ற அசுரர்களை அழித்தபோது அவர்களுடைய ரத்தம் பூமியில் படித்ததால் இத்தலம் செங்காட்டங்குடி என்றழைக்கப்பட்டதாகக் கூறுகிறது.
இத்தலத்திற்கு வேறு பெயர்களும் உண்டு . சிவ பெருமான் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஸப்தகோடி மகா மந்திரங்களை அருளியதால் மந்திரபுரி என்றும், ஸத்யாஷாட முனிவர் வழிபட்டதால் சாத்தியபுரி என்றும், பிரம்மா வழிபட்டதால் பிரம்மபுரி என்றும் ப்ரம்மனுக்காக பொய் சொல்லிய தாழம்பூ அப்பாவத்தைப் போக்குவதற்காக ஆத்தி மரமாக முளைத்து தவம் செய்ததால் ஆத்தி வண்னம் என்றும் சூரியன் வழிபட்டதால் பாஸ்கரபுரி என்றும், சமுத்திரராஜன் வழிபட்டதால் சமுத்திரபுரி என்றும், இந்திரன் வழிபட்டதால் இந்திராபுரி என்றும் வழங்கப்படுகிறது .
கஜமுகாசுரன் சம்ஹாரம் :
மாகத்தான் என்ற முனிவருக்கும் விபுதை என்னும் அசுரப்பெண்ணுக்கும் யானை முகம் கொண்ட புத்திரன் பிறந்தான். அவனே கஜமுகாசுரன். அவன் பரமேஸ்வரனை நோக்கி தவமிருந்தான். அதன் பலனாக தேவர்களாலோயே அல்லது மற்ற எந்த ஆயுதத்தினாலாயே தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். விசித்ரசாந்தி என்பவளை மணந்து மதங்கபுரி என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். பெற்ற வரன்களின் தன்மையால் தயவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தயவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை பணிக்க , கணபதி அசுரனின் வரன்களின் தன்மைகளையறிந்து , பூத குணங்களுடன் சென்று தனது வலது கொம்பை ஒடித்து அவன்மீதெறிந்து அசுரனை விதைத்தார். பின்னர் அந்தக்கொம்பும் அவர் திருக்கரத்தை வந்தடைந்தது. அப்போது ஏற்பட்ட குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி இவ்விடத்தையே செங்காடாக மாற்றியதால் இத்தலத்திற்கு செங்காட்டங்குடி என்று பெயர் வந்தது .
கஜமுகாசுரன் வாதத்தின் பின்னர் கணபதி ஈசனை வழிபட்ட விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பூர்வ பட்சமும் , சத்தியமும் , சஷ்டியும் கூடிய நன்னாளில் நடைபெறுகிறது.
சத்தியாஷாட முனிவர் தவம் :
சத்தியாஷாடர் என்ற முனிவர் ஈசனை நோக்கி கடுந்தவம் இயற்றி வந்தார். அப்போது அத்தவத்திற்கு இடையூறாக ரக்தபீஜன் , ரக்தனாமுகி என்ற அசுரர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். முனிவர் இறைவனிடம் வேண்ட ஈசனும் அவர்களை அழிக்க முனைந்தார். அவ்வசுரர்களுடன் போர் செய்தார் .
அசுரர்களை வெட்ட வெட்ட அவர்கள் குருதி நிலத்தில் சொட்டச் சொட்ட அதனிலிருந்து மீண்டும் ஒரு அசுரன் உயிர்பெற்று வந்தான். ஆகவே அவர்களின் குருதி நிலத்தில் படாமல் அதனை உட்கொண்டு அசுரர்களை பெருமான் அழித்தார். ஆகவே இத்தலத்திற்கு செங்காட்டங்குடி என்று பெயர் வந்ததாக மற்றுமொரு புராணம் கூறும். முனிவர் நீராடி வழிபட்ட தீர்த்தம் சத்திய தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இத்தீர்த்தம் கோயிலுக்கு முன்புறம் உள்ளது .
வாசுதேவன் புத்திர பாக்கியம் பெறல் :
பாண்டிய நாட்டில் பொதிகை மலைச் சாரலில் தாமிரபரணி நதிக்கரையில் வாசுதேவன் என்ற அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். எல்லா செல்வங்களும் இருந்து புத்திரச் செல்வம் இல்லாததால் துயருற்று அகத்திய முனிவரைக் குறித்து தவமிருந்தான்.
முனிவரும் அவன் முன் தோன்றி சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்ற தளத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி அடியார்களுக்கு அன்னமிட்டு பெருமானை வழிபட்டால் சத்புத்திரன் பிறப்பான் என்றருளினார். அவ்வாரே வசுதையிவன் பலதலங்களுக்கும் சென்று தலயாத்திரை முடித்து இறுதியில் செங்காட்டங்குடி வந்து முனிவர் சொன்னது போல் வழிபாட்டு புத்திரப்பேறடைந்து இன்புற்று வாழ்ந்து நற்கதியடைந்தான்.
வாதாபி கணபதி :
ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு மாமாத்திரர் குலத்தில் பரஞ்சோத்தியார் என்பவர் பிறந்தார். கல்வி கேள்வி கலைகளில் சிறந்து விளங்கிய அவர் போர்க்கலைகளிலும் சிறந்தவராயிருந்தார். யானையேற்றம் , குதிரையேற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டு மிகுந்த சிவ பக்தராய் விளங்கினார்.
பரஞ்சோத்தியார் பல்லவ மன்னனுக்கு முதன்மந்திரியாக விளங்கினார். மன்னனுடன் வடநாட்டிலுள்ள வாதாபி நகருக்கு படையெடுத்துச் சென்று அம்மன்னனை முறியடித்தவுடன் அங்கிருந்து பிற பொருட்களுடன் அழகிய ஒரு விநாயகர் மூர்த்தத்தையும் கொண்டு வந்தார். இம்மூர்த்தத்தை கோயிலின் தென்மேற்குப் பகுதியில் தனிச்சந்நிதியாக பிரதிஷ்டை செய்துள்ளார். இம்மூர்த்தம் தென்னாட்டுச் சிவாலயங்களில் உள்ளது போன்று இல்லாமல் சற்றே வேறு அமைப்பாக உள்ளது. பிள்ளையார் இரு கைகளையும் தொடையில் ஊன்றி தும்பிக்கையை இடப்பக்கம் சுழித்து காட்சியளிக்கிறார்.
போர் முடிவுற்ற பின் மனம் மாறி போர்த்தொழில் துறந்து சிவத்தொண்டே கதி என்று செங்காட்டங்குடியில் வாழ்ந்து நற்கதியடைந்தார்.
பெருமான் பிள்ளைக்கறி கேட்டல் :
வாதாபி வெற்றிக்குப்பின்னர் அரச பணியைத் துறந்து சிவத்தொண்டராகி திருவெண்காட்டு நங்கை என்னும் அம்மையாரை மணந்து நல்லறம் நடத்திவந்தார் . சிவத்தொண்டர்களின் சிறுத்த தொண்டனாக தம்மைக் கருதியதால் அவருக்கு சிறுத்தொண்டர் என்ற பெயர் ஏற்பட்டது. ஈசன் நல்லருளால் சீராளன் என்ற மகவும் பிறந்தது.
தமது அடியாரின் பெருமைதனை உலகறியச் செய்ய சிவபெருமான் பைரவ வேடம் தாங்கி வடக்கிலிருந்து வருபவர் போல் வந்தாள். அதனாலேயே அவருக்கு உத்ராபதி என்ற பெயர் வந்தது. செங்காட்டங்குடி வந்த உத்திராபதீசர் சிறுத்தொண்டர் வீட்டு வாசல் முன் வந்து நின்று உணவு கேட்க அப்போது சிறுத்தொண்டர் அங்கில்லாமல் போகவே, கோவிலுள் உள்ள ஆத்தி மரத்தினடியில் அமர்ந்தார்.
சிவனடியார் மனைக்கு வந்தமையறிந்த சிறுத்தொண்டர் ஓடிவந்து உத்ராபதியாரை தம் மனைக்கு விருந்துண்ண வரும்படி அழைத்தார் . அப்போது பைராகி வேடத்திலிருந்த பெருமான், எனக்கு உணவு சமைப்பது அத்துணை எளிதல்லவே. தாய் தந்தைக்கு ஒரே மகனாகவும் , உடல் ஊனம் இல்லாதவனாயும் இருக்கும் ஒரு மகனை தாயே அறிந்து கறி செய்து நர மாமிசம் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
அது கேட்ட சிறுத்தொண்டர் உடனே வீட்டுக்கு விரைந்து சென்று மனைவியிடம் சம்மதம் பெற்று பள்ளிக்குச் சென்றிருந்த சீராளனை அழைத்து வந்து நீராட்டி பெற்றவர் யாவரும் செய்யத்துணியாத செயற்கரும் செயலை செய்யத்துணிந்தார். திருவெண்காட்டு நங்கையும் , சந்தன நங்கையும் சீராளனைப் பலவிதமான கறி செய்து முடித்தனர்.
சமையல் முடிந்ததும் சிறுத்தொண்டர் அத்தி மரத்தினடிக்கு ஓடிச் சென்று சிவனடியாரை அமுதுண்ண அழைத்தனர். அவரும் இல்லம் வந்து உண்ண அமர்கையில் உத்ராபதியார் சிறுத்தொண்டரை நோக்கி உணவுண்ண இன்னுமொரு சிவனடியாரை அழையுங்கள். எனக்கு தனியாக உணவு உண்டு பழக்கமில்லை என்றார். அப்படி யாரும் அங்கில்லையே என சிறுத்தொண்டர் வருந்தி கூற , உமது மகனையாவது அழைத்துவாருங்கள் என்றார்.
தர்ம சங்கடத்தில் ஆழ்ந்த சிறுத்தொண்டரும் இல்லத்தாரும் கை பிசைந்து நிற்க , உத்ராபதியார் சிறுத்தொண்டரைப் பார்த்து வெளியே போய் அழையுங்கள், வருவான் என்று கூறினார். சஞ்சலத்துடன் செய்வதறியாது சிவனடியாரது கட்டளையை மீறமுடியாமல் வெளியே போய் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என்றழைக்க அப்போது தான் பள்ளியிலிருந்து வருபவனபோல் துள்ளி குதித்து சீராளன் ஓடி வந்தான்.
அத்யு கண்டு மிக்க புளகாங்கிதம் அடைந்த சிறுத்தொண்டரும் வெண்காட்டு நன்கையும் அடியார் உருவிலிருந்த பெருமானிடம் சீராளனை அழைத்துச் செல்ல அவர் அங்கு இல்லை . இலையிலிருந்து உணவும் மறைந்துவிட்டிருந்தது. அப்போது உமா மகேஸ்வரராய் , சுப்ரமண்யரோடு பெருமான் காட்சியளித்து , பரஞ்சோதி , உனது தொண்டினை உலகிற்கு உணர்த்தவே யாம் அவ்வாறு திருவிளையாடல் புரிந்தோம் என்று கூறி அருள் புரிந்து மறைந்தார். இவ்வரலாற்றுச் சிற்பம் கோயிலுள் உள்ளது .
ஆலயத்தின் வெளியே தென்மேற்கில் சூரிய புஷ்கரிணியும் அதனையடுத்து சிறுத்தொண்டர் கோயிலும் உள்ளன. அக்கோயில் இருக்கும் இடத்தில்தான் முன்பு சிறுத்தொண்டர் இல்லம் இருந்ததாக கருதப்படுகிறது. கோயிலின் திருவாயிலின் மேல் உத்ராபதியார் மற்றும் சிறுத்தொண்டர் திருவுருவங்கள் இருக்கின்றன.
உட்புறம் உத்ராபதியார் அமர்ந்த நிலையில் அமுதுண்ணும் திருக்கோலத்திலிருக்கிறார். திருவெண்காட்டு நங்கையார் உணவு பரிமாறுவதுபோல் உள்ளது. சித்திரை பரணியில் உத்திராபதீசர் இக்கோயிலில் எழுந்தருளும் அமுதுபடையால் விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
காடவர்கோன் உத்திராபதியாரின் உருவாகி சிலையமைத்தல் :
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த மன்னன் ஐயடிகள் காடவர்கோன் சிறுத்தொண்டர் ஈசனின் திருவருளால் கயிலை சென்றதைக் கேள்வியுற்று , பெருமானை தரிசிக்கும் எண்ணம் கொண்டு திருச்செங்காட்டங்குடிக்கு வந்து பரஞ்சோத்தியாருக்குக் காட்டிய கோலத்தை தமக்கும் காட்டவேண்டும் என்று நெக்குருகி வேண்டினான் .
அப்போது கணபதீச்சரமுடையார் , நீ இருபத்தியொரு நாட்களுக்குள் திருப்பணி செய்து உத்திராபதீசரின் திருவுருவம் ஒன்றமைத்து சித்திரைத் திருவொயென நாளில் கும்பாபிக்ஷேகம் செய்தால் வடக்கு வீதியில் உனக்கு செண்பகப்பூ மணத்துடன் காட்சி தருவோம் என்றுரைத்தார் .
உடனே செயலில் இறங்கினான் அரசன். எவ்வளவு முயன்றும் உத்ராபதியாரின் சிலை சரிவர அமையவில்லை. பெருந்துயர் கொண்டான் மன்னன். அப்போது பெருமான் ஒரு சிவயோகியின் உருக்கொண்டு உலைக்களத்திற்கு வந்து பருகுவதற்கு நீர் வேண்டும் என்று கேட்டார் . குருமார்கள் அங்கு கொதிக்கும் உலை மட்டுமே இருப்பதாகக் கூறவே , அதுவே போதும் என்று வாங்கி உண்டார் . அதுவே அழகிய உருவாய் அமைந்தது .
சிவயோகி மறைந்தார் . பின்னர் அந்த உருவத்தில் உளி பட்டபோது குருதி பீறிட்டது. குங்குமப்பூ பச்சைக்கற்பூரம் சார்த்தியவுடன் நின்றது. அத்திருவுருவே மூலவருக்குப் பக்கத்தில் திருச்சந்நிதி கொண்டுள்ளது. இவ்வாறு குங்குமப்பூ , பச்சைக்கற்பூரம் சார்த்தி வருடத்திற்கு பத்து அபிக்ஷேகங்கள் நடைபெறுகின்றன.
ஐயடிகள் காடவர்கோனின் திருவுருவம் சிறுத்தொண்டர் கோயிலில் உள்ளது .
தலவிருக்ஷம் அத்தி. உத்திராபதீஸ்வரரின் உற்சவ மூர்த்தத்திற்கு நாடாரும் பச்சைக்கர்ப்பூரமும் குங்குமப்பூவும் சார்த்தப்படுகிறது. பேழையில் மரகத லிங்கம் உள்ளது. ஒன்பது தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. அவை சத்திய தீர்த்தம் , சந்திர தீர்த்தம் , சூரிய தீர்த்தம் , அக்னி தீர்த்தம் , இந்திர தீர்த்தம், எம தீர்த்தம் , வருண தீர்த்தம் , வாயு தீர்த்தம் , சீராள தீர்த்தம் என்பனவாகும்.
நாடோரும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன . கல்வெட்டுகளில் ஈசனின் பெயர் செங்காடுடைய நாயனார் என்றும் , கணபதீச்சரமுடைய மகாதேவர் என்றும் , தலத்தின் பெயர் கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி என்றழைக்கப்படுகிறது.
இக்கோயியில் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலாகும். உத்திராபதீஸ்வரருக்கு ஆணி உத்திரம் , மார்கழித் திருவாதிரையில் அபிக்ஷேகங்கள் , நவராத்திரி , கார்த்திகை சோமவாரங்கள், மார்கழியில் பாவை விழா, சிவராத்திரி ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.
சித்திரை மாத பிரமோற்சவத்தில் ஆறாம் நாளான பரணியில் பிட்சாடன உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய அமுதுபடையால் விழா, காலையில் உத்திராபதீசர் கயிலையிருந்து புறப்பட்டு கஞ்சுகம் , சூலம் , கபாலம் , சடை முதலிய கோலத்துடன் வெள்ளை சார்த்தி எழுந்தருளுவார். அப்போது நட்டு முட்டு மற்றும் சிலம்பு வாத்தியங்கள் முழங்கப்படும். பகல் நேரத்தில் உத்ராபதியார் அமுது கேட்க சிறுத்தொண்டர் இல்லத்திற்கு வந்து அவர் அங்கு இல்லாததால் அத்தி மரத்தினடியில் எழுந்தருளியிருப்பார் .
இரவில் அமுது செய்யும் பொருட்டு சிறுத்தொண்டர் இல்லமாகிய கோயிலுக்கு மீண்டும் வருகை தருவார் . அபபோது உத்ராபதியார் மறைந்து ரிஷப வாகனத்தில் அருட்ஜோதி வடிவாய் எழுந்தருளி சிறுத்தொண்டர் முதலியோருக்கு காட்சியளித்து கயிலைக்கு அழைத்துச்செல்வார். இதுவே திருச்செங்காட்டங்குடியில் நடைபெறும் முக்கியமான திருவிழாவாகும் .
அருள்மிகு உத்திராபதீசர் திருக்கோயில்,
திருச்செங்காட்டங்குடி,
திருக்கண்ணபுரம் அஞ்சல்
நன்னிலம், நாகை மாவட்டம்
தொலைபேசி 04366 270278