புரிகுழல் நாயகி சமேத நர்த்தன வல்லபேஸ்வரர், கூடலையாற்றூர்
அமைவிடம் :
நடுநாட்டுத் தலம்.
சேத்தியாதோப்பு-கும்பகோணம் பாதையில் ‘குமாரகுடி’ வந்து , ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரித்து 2 கி. மீ. சென்று, ‘காவாலகுடி’ சாலையில் திரும்பி. 2 கி. மீ. சென்று ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையாலம். கோயில்வரை பேருந்து செல்லும்.
மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலால் கூடலையாற்றூர் என்று பெயர் பெற்றது. வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிய, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து, இவ்வூரில் கோயிலைக் கட்டி சுவாமி அம்பாளை எழுந்தருளச் செய்துள்ளார். இக்கோயில் நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதென்பர் .
சுந்தரர் திருமுதுகுன்றம் சென்றபோது, இத்தலத்தை வணங்காமல் செல்ல இறைவன் அந்தணராக வந்து, முன்செல்ல; சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழி யாதெனக் கேட்க, ‘கூடலையாற்றுருக்கு வழி இது என்று கூறி மறைய, திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார் என்பது வரலாறு.
கோவில் அமைப்பு :
பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கிழக்கு நோக்கிய சந்நிதி. கொடிமரம் பலிபீடம் இல்லை. நந்தி உள்ளது. வெளிச்சுற்றில் பக்கவாயில் உள்ளது. நடராச சபை உள்ளது.
அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். இத்தேவி மிகவும் சக்திவாய்ந்த அம்மை என்று மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.
மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. சுவாமிக்கு வலப்பால் பராசக்தி அம்பாள் சந்நிதி உள்ளது. இதுவும் நின்ற திருக்கோலமே. நடராச சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது.
இங்குள்ள உற்சவ மூர்த்தங்களுள் சிறப்பானது-சித்ரகுப்தர் ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்டு காட்சி தருவது. இம்மூர்த்தம் பிற்காலத்தில் பிரார்த்தனையாக ஒருவரால் செய்து வைக்கப்பட்டதாகும்.
இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலப்பால் சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. இரு அம்பாள் சந்நிதிகளில் பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறும், ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமமும் தரப்படுகிறது. மதிலின் வெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், அஷ்டபுஜ துர்க்கை முதலியவைகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது
கோவில் முகவரி ;-
அ/மி. நர்த்தனவல்லபேஸ்வரர் – நெறிகாட்டுநாதர் திருக்கோயில்,
திருக்கூடலையாற்றூர்,
காவாலகுடி அஞ்சல் – 608702
காட்டுமன்னார்கோயில் வட்டம்